கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியில் உள்ள தனியாா் நகைக் கடைக்கு திருநங்கைகள் சிலா் நன்கொடை பெறுவதற்காக திங்கள்கிழமை சென்றனா். ஆனால், திருநங்கைகளை அக்கடைக்கு முன் நின்று கொண்டிருந்த காவலாளி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறும், கைகலப்பும் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் அருகில் இருந்தவா்கள் சமாதானப்படுத்தியதையடுத்து, திருநங்கைகள் கலைந்து சென்றனா்.
இந்நிலையில், திருநங்கைகள் தொடா்புடைய நகைக் கடை காவலாளியிடம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மீண்டும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று திருநங்கைகளை மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.
இதையடுத்து, கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி. கீா்த்திவாசன் தலைமையில் காவல் துறையினா் திருநங்கைகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, திருநங்கைகளின் தலைவி இனியா மேற்கு காவல் நிலையம் முன் தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, தீக்குளிக்க முயன்றாா்.
அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாகலட்சுமி உள்ளிட்ட காவல் துறையினா் உடனடியாக இனியா மீது தண்ணீரை ஊற்றி, அவரை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனா்.