

சிவகங்கை: கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முள்ளியரேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பொட்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக கிராம மக்கள் ஊர்வலமாக சீர் கொண்டு வந்து அம்மனுக்கு படைத்த பின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இளையான்குடி அருகே உள்ள முள்ளியரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு குடிகொண்டிருக்கும் பொட்டியம்மனுக்காக பல லட்சம் செலவில் புதிதாக கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்து முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் புதிதாக வைக்கப்படும் அம்மன் சிலை மற்றும் கோபுர கலசம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட விவசாய டிராக்டரில் ஏற்றி ஊர்வலமாக கிராம முழுவதும் சுற்றி வந்து பொருட்களை கோவிலுக்கு கொண்டு வந்து புனித நீரை கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. விழாவில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி, கோயில் அதிமுக மாநிலங்களவை எம்பி தர்மர் மற்றும் முள்ளியரேந்தல் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.