தூத்துக்குடியில் விசைப்படகுகள் 2வது நாளாக ஸ்ட்ரைக்!

59பார்த்தது
தூத்துக்குடியில் ஐஸ்கட்டிகள் உயர்வு காரணமாக விசைப்படகுகள் இன்று 2வது கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தொழிலுக்குச் செல்லும் விசைப் படகுகளுக்குத் தேவையான ஐஸ்கட்டிகளை, ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் உரிமையாளர்கள் வழங்கி வந்தனர். தற்போது மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

அதனால், ஐஸ்கட்டிகளுக்கு கூடுதலாக பார் ஒன்றுக்கு ரூ. 10 வழங்க வேண்டும் என ஐஸ்கட்டி உரிமையாளர்கள் விசைப்படகு உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், இந்த கோரிக்கையை விசைப்படகு உரிமையாளர்கள் ஏற்காததைத் தொடர்ந்து, நேற்று விசைப்படகுகளுக்குத் தேவையான ஐஸ்கட்டிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், நேற்று மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் இன்று 2வது நாளாக படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் 265 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன்பிடித் தொழிலாளர்களும் வேலையை இழந்துள்ளனர். தற்போது மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால் சுமார் ரூ. 4 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி