தூத்துக்குடி: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகு மீனவா்கள்

85பார்த்தது
தூத்துக்குடி: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகு மீனவா்கள்
ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்க கோரி தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள்-தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மீனவர்கள் கடந்த 10ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. அதையடுத்து, உதவி ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க. இளம்பகவதி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மற்ற மாவட்ட மீனவர்களைப் போல தங்களையும் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். 

இல்லையெனில், இரவு 9 மணிக்கு பதிலாக கூடுதலாக நள்ளிரவு 12 மணி வரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இப்பிரச்னை தொடர்பாக நாட்டுப்படகு மீனவர்களின் கருத்தைக் கேட்டு, ஒரு வாரத்துக்குப் பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மீன்வளத் துறையினர், வருவாய்த் துறையினர், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர், மீன்பிடித் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதுதொடர்பாக மீனவர்கள் கூறுகையில், 'ஒரு வாரமாக கடலுக்குச் செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை தொடர்பாக உரிய தீர்வு கூறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, திங்கள்கிழமை முதல் கடலுக்குச் செல்லவுள்ளோம்' என்றனர்.

தொடர்புடைய செய்தி