நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (50). இவரது மனைவி கிளாடிஸ் (45). இவர்கள் குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்றனர். சொந்த ஊரான ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று (மார்ச் 29) காலையில் ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், அவரது மனைவி கிளாடிஸ் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர். ஆற்றில் குளிப்பதற்காக கிளாடிஸ் இறங்கியுள்ளார்.
அவருடன் அவரது உறவினரின் பெண் குழந்தை அவினா 5 வயது குழந்தையையும் அழைத்துக் கொண்டு இறங்கியுள்ளார். இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கியுள்ளனர். உடனே கரையில் இருந்த உறவினர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர்.
ஆனால் இருவரும் கிடைக்கவில்லை. சிறிது நேர தேடலுக்கு பிறகு இருவரையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதைக் கேட்ட உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.