தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள சேலம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று(செப்.19) மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 5 தாலுகாக்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காடையாம்பட்டி தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 25-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து இருந்தனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில், டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அதற்குரிய உபகரணங்கள் அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கோஷங்களை எழுப்பினர்.