

திருவாடானை: திரோபதை வேடமிட்டு வீதிஉலா வந்த பக்தர்கள்
திருவாடானை அருள்மிகு தர்மர் மற்றும் அருள்மிகு திரோபதை அம்மன் கோவில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு மகாபாரத போரின் 17ம் நாள் நிகழ்வாக திரோபதை வேடமிட்டு வீதி உலா வந்த பக்தர்கள். திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தால் பராமரிக்கப்படும் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு தர்மர் மற்றும் அருள்மிகு திரோபதை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து இன்று 9வது நாள் திருவிழா நிகழ்வாக மகாபாரத போரின் 17வது நாள் நிகழ்வினை நினைவுகூறும் வகையில் போரில் வெற்றி பெற்றவுடன் தனது தலை முடியை அள்ளி முடிந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திரோபதை அம்மன் வேடமிட்ட பக்தர்கள் திருவாடானை நகர் முழுவதும் இரவில் சுற்றி வீதி உலா வந்தனர். இவர்களை பொதுமக்களும் பக்தர்களும் வழிபட்டனர். இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். எத்தனையோ ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.