செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அறிவுடைநம்பி, நரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த முகாமில், இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, வேலைவாய்ப்பு, வீடு ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 408 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள அரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 54 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.