
ஈரோடு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட காவேரி ரோடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள எடைநிலையம் ஒன்றின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவரிடம் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர், ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்த காசிபாளையம் லட்சுமணன் வீதியைச் சேர்ந்த குமார் (44) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.3,000 மதிப்பிலான 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், சித்தோடு போலீசார், ஊத்துக்காடு பிரிவு அருகே நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்கூட்டர் ஒன்றின் அருகில் நின்றிருந்த நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை இருசக்கர வாகனத்துடன் சேர்த்து போலீசார் மடக்கி பிடித்தனர்.