பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனங்களுக்கு அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. நேற்று (பிப்.7) காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.26 அடியாக குறைந்துள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு பிப்.6 முதல் மீண்டும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 2,150 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. பிப்.7 காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 30.58 அடியாக உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 19.09 அடியாக உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.