புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூரை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்கள் ஆகிவிட்டன. புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்? ” என கேள்வி எழுப்பினர்.
அப்போது, காவல் துறை தரப்பில், 3 மாதங்களில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.