விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோவில் முக்கிய திருவிழாவான பூக்குழி திருவிழாவில் நேற்று நேர்த்திக் கடனை நிறைவேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூ இறங்கி வழிபாடு செய்தனர். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் பூக்குழி திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் ஆறு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் 13 நாட்கள் நடைபெறும் பூக்குழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 12 ஆம் நாள் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 12 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஆண்கள், பெண்கள் உட்பட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து தங்கள் வழிபாட்டை செய்தனர். நேற்று நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மஞ்சள் காப்பு அணிந்து பூ இறங்கி வழிபட்டனர்.