சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் அறிய வகையிலான தங்க மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்துள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 4400 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வில் பல அரிய வகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் "தங்கத்தால் செய்யப்பட்ட மணி" ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொன்மையான மனிதர்கள் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் பெரிய அளவில் வாணிபம் நடந்ததற்கான சான்றாக தங்கப் பொருட்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.