* சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ படித்துறை விநாயகர் கோவிலில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள்;
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ படித்துறை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 9. 6. 24 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 20. 8. 2024 அன்று கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்நிலையில் கோவில் பூசாரி சதாசிவம் வழக்கம்போல் கோவிலை இன்று காலை திறக்க வந்தபோது கோவிலின் முன்பக்க கதவு அடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே உண்டியல் இருந்த இடம் உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போனது தெரிய வந்தது. மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து தூக்கிச் சென்றுள்ளனர். கடைசியாக உண்டியல் திறக்கப்பட்டு 27 தினங்கள் ஆன நிலையில் திருடு போன உண்டியலில் ரூ 5, 000 முதல் ரூ 10, 000 வரை பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை கொண்டு வருகின்றனர்.