திண்டிவனம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக ரூ. 60 கோடி செலவில் இரண்டு பிளாக்குகள் கொண்ட மருத்துவமனை வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இறுதிக்கட்ட பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். பணிகள் குறித்து மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் ரமேஷ்பிரபு, மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் முரளிஸ்ரீ, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜவேல் ஆகியோரிடம் கேட்டறிந்தார். ஆய்வுக்கு பின் கலெக்டர் கூறுகையில், 'மருத்துவமனையின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. வரும் மே 15ம் தேதிக்குள் பணிகள் முடிந்துவிடும். மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள் திறப்பு விழாவிற்கு முன்னதாக முறைப்படி அரசு மூலம் தேர்வு செய்யப்படுவர்' என்றார். திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், தாசில்தார் சிவா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.