கி. பி. 1320-ம் ஆண்டு காலவாக்கில் ஸ்ரீரங்கத்தில் நடந்த மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள், திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார். அந்தவகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமல் ராவ் தலைமையிலான குழுவினர் இன்று கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் திருப்பதி வஸ்திர மரியாதை காலை 7 மணிக்கு புறப்பட்டு வீதிஉலா வந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அலுவலர் லோகநாதன், மடம் பொறுப்பாளர் ராஜா ரெட்டி ஆகியோரிடமிருந்து வஸ்திரமரியாதையை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன்,அர்ச்சகர் சுந்தர்பட்டர், கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.