பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா ஏப்ரல் 13-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. கொடியேற்றத்தையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இன்று அதிகாலை 3. 15 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3. 45 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கொடி படம் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு காலை 5. 45 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நம்பெருமாள் காலை 6. 15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 6. 30 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு(தேருக்கு) வருகிறார். காலை 7. 30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 13-ந்தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது