மன்னார்குடி அருகே ராமாபுரம் கிராமத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போடூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த ஒரு மாதமாக வாத்து மேய்த்து வருகிறார். இவருடன் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் வாத்து மேய்த்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் 1098 குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தைகள் நல குழுவினர் மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் சென்று சிறுவர்களை மீட்டு குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரித்த போது குழந்தைகளை தலா நாற்பதாயிரம் ரூபாய் விதம் 80 ஆயிரம் கொடுத்து விஜயகுமார் வாங்கி கொத்தடிமையாக வைத்துள்ளது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விஜயகுமாரை மன்னார்குடி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவர்களை திருவண்ணாமலை மாவட்ட நலக்குழுவிற்கு விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.