பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (50). சித்த மருத்துவரான இவர், அதே பகுதியில் சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கு சித்த மருத்துவம் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (70) என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக, பெருமாள் நடத்தி வரும் சிகிச்சை மையத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு பெருமாள் ஊசி செலுத்திய சில நிமிஷங்களில் ராஜேந்திரன் உயிரிழந்தார். தகவல் அறிந்து பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சித்த மருத்துவரான பெருமாள் ஆங்கில மருத்துவமும் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் பெருமாளை புதன்கிழமை கைது செய்தனர்.