ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே புது பையூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் என்கிற சதாசிவம். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் கட்டிட வேலை ஒன்றை எடுத்து பார்த்துள்ளார்.
தேவகோட்டை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தச்சர் வேலை செய்து வந்துள்ளார்.
வேலை செய்ததற்கான கூலியை சதாசிவம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி தேவகோட்டை ஸ்டேட் பேங்க் அருகே சதாசிவம் நின்றிருந்தார்.
அங்கு தனது சகோதரர் கருப்பையாவுடன் வந்த நாகராஜ் சதாசிவத்திடம் கூலி தொகையை கேட்டு தகராறு செய்துள்ளார்.
மூவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் ஆத்திரமடைந்த நாகராஜ் மற்றும் அவரது சகோதரர் கருப்பையா சேர்ந்து சதாசிவத்தை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சதாசிவம் உயிரிழந்தார். தேவகோட்டை காவல்துறையினர் நாகராஜ், கருப்பையா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது கருப்பையா உயிரிழந்தார். நாகராஜன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார்.