சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் துட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ்( 44). இவரது நண்பரான மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரைச் சேர்ந்த நரசிம்மன் (43), ஆகிய இருவரும் டிராக்டர் வண்டியில் அதிகாலை 3 மணிக்கு சேலத்திலிருந்து கோயமுத்தூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கலியனுர் பிரிவு அருகே பின்னால் தர்பூசணி பாரம் ஏற்றி வந்த சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ், நரசிம்மன் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் ஓட்டுநரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த தீபக்( 23), என்பவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.