ஓமலூர் அருகே தொழிலாளி சாவு!

65பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் உள்ள கருப்பூரை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சுமார் 15 அடி ஆழத்தில் மோட்டார் பொருத்தும் பணி நடந்தது. இதில் முத்துநாயக்கன்பட்டி பாலக்கொட்டப்பட்டி காலனியை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 39) என்பவர் உள்பட 5 பேர் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
நேற்று பணியை முடித்துக்கொண்டு அவர்கள் புறப்பட்டனர். ஒவ்வொருவராக கிணற்றுக்குள் இருந்து மேலே ஏறினர். தொழிலாளி செந்தில்முருகன் கடைசியாக கிணற்றுக்குள் இருந்து மேலே ஏற முயன்றார். அப்போது கிணற்றின் பக்கவாட்டு சுவரில் இருந்து மண் சரிந்து செந்தில்முருகன் மீது விழுந்து அழுத்தியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் செந்தில்முருகன் மண்ணுக்குள் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து. செந்தில்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி