நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள தேவாலா வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் 8 மாத பெண் சிறுத்தை குட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், வனவர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான குழுவினர் சிறுத்தை குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சிறுத்தை குட்டி நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.