பரமத்தி வேலூர் அருகே ரூ. 2.83 கோடி பறிமுதல்

4469பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ. 2 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்தக் காரை ஓட்டி வந்த டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து திருச்செங்கோடு மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக எடுத்துவரப்பட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காரில் இருந்த ரூ. 2 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பரமத்தி வேலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்படும் பணம் பாதுகாப்பான வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் உடன் கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் தனியார் காரில் ரூ. 2 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரத்தை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் காரில் கொண்டுவரப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி