25 நாட்கள் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வேதாரண்யம் வந்தடைந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 25 நாள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கடந்த 7ம் தேதி தொடங்கியது. 22 ஆம் நாளான இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு சைக்கிளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வந்தனர். குழுவினருக்கு சர்தார் வேதரத்தினத்தின் பேரன் கேடிலியப்பன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி. வி ராஜேந்திரன், ரோட்டரி சங்கத்தினர் வரவேற்பு கொடுத்தனர். தேச பாதுகாப்பு, பாதுகாப்பான கடற்கரையையும் உருவாக்க கடலோர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. சைக்கிள் விழிப்புணர்வு பேரணியினர் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சர்தார் வேதரத்னம், வைரப்பன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைகளுக்கு மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர். 6553 கிலோ மீட்டர் தொலைவு நடைபெறும் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வரும் மார்ச் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரி சிவகுமார் தெரிவித்தார்.