விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எம்.கே. தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (43). மென்பொருள் நிறுவன ஊழியரான இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த மாதம் மனைவி, குழந்தைகளுடன் சென்றார்.
பிப்ரவரி 6-ஆம் தேதி பொதிகை விரைவு ரயிலில் தாம்பரத்திலிருந்து குளிர்சாதனப் பெட்டியில் சிவகாசிக்கு குடும்பத்துடன் பயணம் செய்தார். சிவகாசி ரயில் நிலையத்தில் இறங்கியபோது, வெங்கடேஸ்வரன் வைத்திருந்த ஐ-பேட் சாதனம் அடங்கிய பை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, மதுரை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் பெட்டியில் ஏறி ஐ-பேட் சாதனம் இருந்த பையைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில் அந்த நபர் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள பி.அம்மாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (31) எனத் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.