குமரியில் மனவளக்குறிச்சி ஐஆர்இஎல் மணல் ஆலை நிறுவனம் குமரி மேற்கு மாவட்டத்தில் ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அரிய வகை மணலை அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன் துறை புனித வியாகுல அன்னை ஆலய பங்கு பேரவை சார்பில் நேற்று(செப்.29) மாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு பங்கு பணியாளர் சுரேஷ் பயஸ் தலைமை வகித்தார். பங்கு பேரவையினர் முன்னிலை வகித்தனர். பேரணி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு சூசைபுரம் காலனி, மேட விளாகம் பகுதி வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகம் வந்தடைந்தது. பேரணியில் மீனவ மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடந்த விளக்க கூட்டத்திற்கு தூத்தூர் மறைவட்ட குருகுல முதல்வர் சில்வஸ்டார் குரூஸ் சிறப்புரையாற்றினார்.