மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு நாளை ( ஏப்ரல் 2ஆம் தேதி) முதல் 6ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள், தமிழ்நாட்டின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் கேரளா மாநில முதலமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான பிணராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக மதுரை சென்றார். நாகர்கோவில் வந்தடைந்தபோது, தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். போலீசாரின் மரியாதையையும் அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேர ஓய்விற்கு பின் நாகர்கோவிலில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.