செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, டாட்ஜ்பால் சப் - ஜூனியர் சாம்பியன் போட்டியில், மகாராஷ்டிரா ஆண்கள், பெண்கள் அணியினர் முதலிடம் பெற்றனர். தமிழ்நாடு அமெச்சூர் டாட்ஜ்பால் அசோசியேஷன் சார்பில், 17 வயதிற்கு உட்பட்ட சப் - ஜூனியர் பிரிவில், தேசிய சாம்பியன் போட்டியை, கடந்த 25ம் தேதி முதல், நேற்று வரை, மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தியது.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, 22 மாணவ அணியினர், 13 மாணவி அணியினர் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டி, மாணவர், மாணவியர், மாணவ - மாணவியர் கலப்பு ஆகிய பிரிவுகளில், லீக், நாக் அவுட் ஆகிய முறையில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர், மாணவியர் அணியினர் முதலிடம் வென்று, சாம்பியன் பட்டம் பெற்றனர்.
மும்பையைச் சேர்ந்த மாணவர், மாணவியர் அணியினர் இரண்டாமிடம், கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் அணி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவியர் அணி, மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பை, பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. இந்திய டாட்ஜ்பால் கூட்டமைப்பு பொதுச்செயலர் பிரார், தமிழ்நாடு அமெச்சூர் டாட்ஜ்பால் அசோசியேஷன் தலைவர் சந்திரபோஸ், செயலர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.