சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு, 30. கார் ஓட்டுனர். ஆனந்தபாபு நண்பர்களுடன் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வந்தார். நண்பர்கள் மொட்டை அடிக்க குளத்தில் இறங்கிக் குளித்தனர். ஆனந்தபாபுவும் குளிக்க குளத்தில் இறங்கினார். பின், குளத்தின் மத்தியில் உள்ள நீராழி மண்டபத்திற்கு நீந்திச் சென்றுள்ளார்.
பாதி துாரத்தில் சென்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே, கரைக்கு திரும்ப முயற்சி செய்துள்ளார். முடியாததால், 'காப்பாற்றுங்கள்' எனக் கூறியபடி, நீரில் முழ்கியுள்ளார். கரைப்பகுதியில் இருந்த நண்பர்களும் கூச்சலிட்டுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த திருப்போரூர் தீயணைப்புத் துறையினர், குளத்தில் ஒரு மணி நேரமாக தேடிய நிலையில், ஆனந்தபாபுவை சடலமாக மீட்டனர். திருப்போரூர் போலீசார் ஆனந்தபாபு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.