சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே சாலையோரம் ஒட்டியுள்ள வனப் பகுதியில் சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு உள்ளாகினர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் இன்று மாலை சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடி அருகே உள்ள சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை விட்டு இறங்க வேண்டாம் எனவும், வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் யாரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.