மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் 3. 0 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலில் ஆன்மீகவாதிகள், கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் பயணிக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கோவை பனாரஸ் இடையிலான சிறப்பு ரயில் நேற்று காலை 6. 30 மணிக்கு புறப்பட்டது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 85-க்கும் மேற்பட்டோர் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிறப்பு ரயிலில் புறப்பட்டனர்.
ரயில்வே துறை சார்பில் இதில் பயணிப்பவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில் நிலைய வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.