கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சிறுவாணி அடிவாரப் பகுதிகளான சாடிவயல், கோவை குற்றாலம், பகுதியை சுற்றி பழங்குடியினர் வாழும் மலை கிராமங்கள் உள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் கோவை குற்றாலம் மற்றும் மலை கிராமங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அங்குள்ள சோதனைச் சாவடியில் மாலை 5 மணிக்கு அடைக்கப்பட்டு மீண்டும் காலை 7 மணிக்குத் தான் திறக்கப்படும் வழக்கம்.
நேற்று (பிப்.7) பிற்பகலில் அந்தச் சோதனைச் சாவடி அருகே உள்ள பழங்குடியினர் கிராமப் பகுதியில் உணவு, தண்ணீர் தேடி ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்தவர்களால், பட்டாசு வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. அதனை அங்குச் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.