ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவை போத்தனூர் சாலை திருமறை நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பொருட்களின் தொகுப்புகளை நேற்று வழங்கினார். கோவை சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளர் கோட்டை ஹக்கிமின் தாய், தந்தையர் லத்தீப் பதுரும்மா அறக்கட்டளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு ரம்ஜான் பொருட்களின் தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு பேசிய எஸ். பி. வேலுமணி, நேற்று முன்தினம் சென்னையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நானும் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரும் கலந்து கொண்டோம். இந்த புனித மாதத்தில் பிறருக்கு உதவும் எண்ணம் ஹக்கீமைப் போல் அனைவருக்கும் வர வேண்டும். 100 பேருக்கு இந்த உதவியை தொடங்கிய அவர், இன்று 7-வது ஆண்டாக ஏழை மக்களுக்கு கொடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன். எடப்பாடியார் தலைமையில் இஸ்லாமிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களையும் உதவிகளையும் செய்துள்ளோம். குறிப்பாக இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கபர்ஸ்தான் கட்டி கொடுத்தது அதிமுக அரசு. மேலும் ஹஜ் யாத்திரைக்காக மத்திய அரசு மானியத்தை நிறுத்திய போதும் அதிமுக அரசு தடையின்றி நிதி உதவி வழங்கியது. அதுபோல் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள் சென்னையில் தங்குவதற்கு ஓய்வு இல்லம் கட்டிக் கொடுத்தது அதிமுக அரசு, என்று கூறினார்.