விஜய் பிறந்தநாள் நிகழ்வில் விபரீதம்: சிறுவனுக்கு தீக்காயம்

549பார்த்தது
சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் ஓடுகளை உடைத்து சாகசத்தில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு பதிலாக பெட்ரோல் பயன்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ஈசிஆர் பி. சரவணன் தலைமையில் நீலாங்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  

அப்போது, கையில் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்து சிறுவன் ஓடுகளை உடைத்ததாகக் கூறப்படுகிறது. ஓடுகளை உடைத்து பிறகு, சிறுவன் தனது கையில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீ அனையவில்லை.

இதையடுத்து, அருகில் இருந்த ராஜன் என்பவர், சிறுவனின் கையில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது, அவரது கையில் இருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோல் , சிறுவனின் கைகளில் சிந்தியது. இதனால், சிறுவன் கை மேலும் தீப்பிடித்து எரிந்தது. அதுமட்டுமில்லாமல், தீயை அணைக்க முயன்ற ராஜன் மீதும் பெட்ரோல் சிந்தியதால், அவரது உடலிலும் தீப்பிடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், சிறுவனையும், ராஜனையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி