
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் பெருங்களத்தூரில் ஜன. 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தாம்பரம் மாநகராட்சி, 5-வது மண்டலம் பெருங்களத்தூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பெருங்களத்தூர் முழுவதும் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கழிவுநீர் கால்வாய்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் திமுக அரசு உள்ளது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜன. 29-ம் தேதி மாலை 4 மணிக்கு பெருங்களத்தூர், காமராஜர் நெடுஞ்சாலை, பெருமாள் கோயில் ரவுண்டானா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சியின் அமைப்பு செயலாளர் டி. ஜெயக்குமார் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.