![ரயில் நிலையத்தில் காவல் நிலைய கட்டடம் அகற்றம் ரயில் நிலையத்தில் காவல் நிலைய கட்டடம் அகற்றம்](https://media.getlokalapp.com/cache/87/2c/872c9ee4841b64bbd242eacf488f51a1.webp)
ரயில் நிலையத்தில் காவல் நிலைய கட்டடம் அகற்றம்
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பழங்கால அடையாளமாக இருந்த ரயில்வே காவல் நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தில், மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக, ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி யில் உள்ள பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, ரயில் நிலைய வாயில் பகுதியில் இருந்த, மிக பழமையான ரயில்வே காவல் நிலையம், ரயில் நிலையத்தின் கடைசி பகுதியில் இருந்த காலி இடத்தில், புதிதாக கட்டப்பட்டு கடந்த மாதம் முதல் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில், ரயிலடி விநாயகர் கோவில் அருகே இருந்த பழமையான ரயில்வே ரயில் நிலைய கட்டடம் நேற்று ஜே. சி. பி. , மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும், வளாகத்தில் இருந்த பெரிய வேப்ப மரங்கள், தென்னை மரங்கள் போன்றவையும் வெட்டி அகற்றும் பணி நடந்தது. இந்த இடத்தில், ரயில்வே பார்சல் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், பழைய ரயில்வே காவல் நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டுள்ளதாக, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.