
விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை: 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, கடந்த 2021, பிப்ரவரி 16-ஆம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமிக்கு, மரக்காணம் வட்டம், அடசல் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ரா. சேகர் (50) தொந்தரவு அளித்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்த போலீசார், தொழிலாளி சேகரை கைது செய்தனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நிறைவடைந்து, குற்றம் நிரூபணமானதால் சேகருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி வினோதா தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 5 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு சேகர் அழைத்து செல்லப்பட்டார்.