வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துவது வழக்கம். அதன்படி கெங்கையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 1, 001 பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கெங்கையம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், ஊர் நாட்டாமை ஆர். ஜி. எஸ். சம்பத், தர்மகர்த்தா கே. பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.