வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக காளியம்மன் கோவில் எருதுகட்டும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு தொங்குமலை கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா மற்றும் எருதுகட்டும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர், ஒரு வீட்டிற்கு ஒரு ஆடு என்ற முறையில் நேர்த்திக்கடனுக்காக சுமார் 100 ஆடுகளை பலியிட்டு காளியம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, முன்னோர்கள் வழிபட்டு வந்த 'ஜாலாமரம்' என்றழைக்கப்படும் மரம், பாரம்பரிய கயிறு, மரக்கட்டையாலான கத்திகள், மேளம் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பெரிய மைதானத்தில் மூங்கில்களால் அமைக்கப்பட்ட கொட்டகைகளுக்கு வாழை, வண்ண மலர்கள், பலா, மாம்பழம் உள்ளிட்டவற்றை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த 6 கொட்டகைகளில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 150-க்கும் மேற்பட்ட மாடுகளை அடைத்து வைத்தனர்.
அதனைதொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் ஒவ்வொரு கொட்டகையில் இருந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த காளைகளை ஒவ்வொன்றாக கயிறு கட்டி அவிழ்த்து விட்டனர். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த விழாவினை காண 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.