தமிழகத்தில் 'மீண்டும் மஞ்சப்பை' பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மஞ்சப்பை விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் நெகிழிகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, அத்தகைய கைப்பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் நெகிழிகளுக்கு மாற்றுகளை பயன்படுத்துவதை ஊக்குவித்த சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் இந்த விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் நெகிழி இல்லாததாக மாற்றியிருக்க வேண்டும். இவ்வாறு தமிழகத்தில் செயல்பட்ட சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு பரிசு வழங்கப்படும். தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்புத் தலைவர்கள் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென்நகலுடன் 2 அச்சுப் பிரதிகள் (கடின நகல்) மாவட்ட ஆட்சியரிடம் மே 1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.