குப்பைக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

71பார்த்தது
குப்பைக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
திருவண்ணாமலை நகரையொட்டி அமைந்துள்ள வேங்கிக்கால் ஊராட்சி, மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும், வாக்காளர் எண்ணிக்கையிலும் மிகப்பெரியது. சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, வேங்கிக்கால் ஊராட்சி, திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைந்திருக்கிறது. ஆனாலும், மாநகராட்சி இன்னும் நிர்வாக செயல்வடிவம் பெறாததால், கிராம ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வேங்கிக்கால் செயல்படுகிறது.

இந்நிலையில், வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. அதனால், சுகாதார சீர்கேடு பெருகியிருக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிபடுகின்றனர். குறிப்பாக, ஓம் சக்தி நகர், தென்றல் நகர், வானவில் நகர், பொன்னுசாமி நகர், நேதாஜி நகர், குபேர நகர், தேவராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைகள் குவியல் குவியலாக குவிந்திருக்கின்றன. தொடர்ந்து பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாதால், சமீபத்தில் பெய்த மழையில் சிதைந்து, சிதறி, அழுகி துர்நாற்றம் வீசுகிறது. ஈக்களும், கொசுக்களும் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி