குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி

547பார்த்தது
குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, நெடும்பிரை கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். மாடு தரகு வியாபாரி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன்கள் பரத்(9), சந்தோஷ்(7). இதில், பரத் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பும், சந்தோஷ் 2ம் வகுப்பும் படித்து வந்தனர். ராமதாஸின் அக்கா செய்யாறு வள்ளலார் தெருவை சேர்ந்த வாணி. இவரது கணவர் முரளிகிருஷ்ணன். இவர்களது மகன் சாய்சரண்(12), தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நெடும்பிரை கிராமத்தில் கோயில் திருவிழாவிற்காக முரளி கிருஷ்ணன் குடும்பத்தினர் வந்திருந்தனர். தொடர்ந்து, சிறுவர்கள் பரத், சந்தோஷ் மற்றும் சாய்சரண் ஆகிய 3 பேரும் நேற்று மாலை 3. 30 மணியளவில் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது, சிறுவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்க தொடங்கினர்.

அந்த கிராமத்தில் காட்டு அம்மன் தீமிதி விழா மாலை 6 மணி அளவில் நடைபெற இருந்த நிலையில், குளத்தின் அருகே உள்ள பச்சையம்மன் கோயிலில் கரகம் வர்ணிப்பதற்காக ஊர்மக்கள் திரண்டு இருந்தனர். அப்போது, குளத்தில் 3 சிறுவர்களும் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம இளைஞர்கள் விரைந்து சென்று, குளத்தில் இறங்கி மீட்க முயன்றனர். ஆனாலும், நீரில் மூழ்கியதில் பரத், சந்தோஷ், சாய்சரண் ஆகிய மூவரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி