சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் , மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களோடு சேர்ந்து மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி ஆணையாளர் , போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு , வெறும் உறுதிமொழி ஏற்பதோடு நிறுத்தி விடக்கூடாது , நீங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும். நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான். உங்களைப் பார்க்கும்போது எனக்கும் பெருமிதமாக உள்ளது. கல்வி பயில்கின்றபோது போதை பழக்கம் உள்ளிட்ட தவறான பாதைகளுக்கு செல்லாமல் கல்வியியல் கவனம் செலுத்த வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் , காவலர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.