திருப்பூரில் இன்று காலை 8. 30 மணி வரை மூடுபனி சூழ்ந்து இருந்ததால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு ஊர்ந்து சென்றன.
குளிர்காலம் முடிவடைய உள்ள நிலையில் திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகரில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்துகிறது; குளிரும் குறைவாக இருந்து வந்த நிலையில், இன்று காலை திடீரென மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளை மூடுபனி சூழ்ந்தது. திருப்பூர் தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, மத்திய பேருந்து நிலையம், குமரன் சாலை, அவிநாசி சாலை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகள் மூடுபனி சூழ்ந்து சாலையில் வாகனங்களே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியது. இதே போல் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி செல்லும் சாலைகளிலும் அதிகாலை முதல் காலை 8. 30 மணி வரை பனி சூழ்ந்து காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுக்கொண்டு சென்றனர். குடியிருப்பு பகுதிகளிலும் காலை 8 மணி தாண்டியும் மூடுபனி சூழ்ந்திருந்தது.