திருப்பூரில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் பனி மூட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. ஒரு சில நாட்களில் மட்டும் பனி குறைந்து காணப்பட்டு நிலையில் கடுமையான பனி மூட்டம் நிலவியது. குறிப்பாக காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரைக்கும் மாநகரையே போர்வையால் போர்த்தியது போல பனிமூட்டம் காணப்பட்டது. காங்கேயம் ரோடு பகுதியில் காலை நேரத்தில் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.
காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கடும் குளிரால் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. முன்னால் நடந்து வருபவர்களும் தெரியாத நிலை இருந்ததால் நடந்து செல்பவர்களும் சிரமப்பட்டனர். சுமார் 12 மணி வரைக்கும் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது. நண்பகலுக்கு பிறகு மாலை வரைக்கும் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. இந்த பனிமூட்டத்தால் நேற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே அதிகாலையில் கடுங்குளிரும், மதிய வேளையில் கடுமையான வெயிலுமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சிலருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டு வருகிறது.