திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா
ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த மாதம் 11-ந்தேதி அன்று முதல் தட்டு படைத்தல், 18-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் தலையலங்காரம் கடந்த 1-ந்தேதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 31 அடி உயரம் உள்ள பெரிய தேரையும், 30 அடி உயரம் உள்ள சிறிய திருத்தேரையும் பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டு திருவீதி உலா சென்றனர்.
பெரிய தேரில் ஓலைப்பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் திருவீதிஉலா கோட்டைமேடு, வழியாக சென்றது. இதனை தொடர்ந்து சந்தைபேட்டை, திருச்சி சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வானப்பட்டறை மைதானம் சென்று பின்னர் எல்லை உடைக்கும் நிகழ்வும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த 18 பட்டி கிராம பொதுமக்கள்,
கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பெருந்திரளளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.