திருச்சி, வடக்கு தாராநல்லூர் அம்மன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டு முத்து. இவரது மகன் கனகராஜ் (வயது 27). பி. எஸ். என். எல். ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஒன்பது மாதங்கள் தான் ஆகிறது. இவரது மனைவி தனலட்சுமி (வயது 22). இவர் பியூட்டி பார்லர் பணி செய்து வருகிறார். கனகராஜுக்கு செல்போனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், மன வேதனையில் இருந்த அவர் மனைவி வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து விடு திரும்பிய மனைவி, கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்த புகாரின் பேரில், காந்தி மார்க்கெட் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் சம்பவ இடத்திற்கு சென்று கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து, ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.