துப்பாக்கிச்சூடு வழக்கு: தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

880பார்த்தது
துப்பாக்கிச்சூடு வழக்கு: தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றார்

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை, தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதா என பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்றத்தில் இருந்து பெற்ற அறிக்கை தவிர, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து அறிக்கை ஏதும் கிடைக்கப்பெறவில்லை என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி