தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் (58), விவசாயி. இவருக்கு வேல்முருகன் (29) உள்ளிட்ட 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு. மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே, பரமசிவம் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். வேல்முருகன் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் பரமசிவம் தனது வீட்டில் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேல்முருகன் இரவில் வீட்டில் திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த வேல்முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.